கதை மரவெட்டியின் வேண்டுதல்
கதை
மரவெட்டியின் வேண்டுதல்
மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான்.
ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான்.
சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான்.
கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.
அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது.
உடனே கடவுளிடம் வேண்டினான். கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் என்றான்.
வேண்டிக்கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான்.
இப்போது முன்புபோல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.
பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் என மீண்டும் வேண்டினான்.
இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான்.
ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன் என்றான்.
மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான். இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது.
என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன் என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான்.
உடனே அவன், உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன் என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான்.
விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான்.
பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறிவிடுகின்றன.


No comments: