கணிதத்தின் கலக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. இ பாக்ஸ் செயல் இயக்குனர் புகழாரம்..
கணிதத்தின் கலக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. இ பாக்ஸ் செயல் இயக்குனர் புகழாரம்..
மாணவர்களுக்கு கணித பாடத்தை மேலும் எளிதாக்கவும், ஆழமாக கற்பிக்கும் வகையிலும், அரசு பள்ளி கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளிக்கல்வித்துறையும், 'இ-பாக்ஸ்' நிறுவனமும் இணைந்து நடத்திய பயிற்சியில், தமிழகம் முழுவதும், பிளஸ் 1, பிளஸ் 2 முதுநிலை பட்டதாரி கணித ஆசிரியர்கள், 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவது குறித்தும், அதன் கணித பயன்பாடு குறித்தும் ஆராய்ச்சி நிபுணர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினர்.இதுகுறித்து 'இ- பாக்ஸ்' செயல் இயக்குனர் பிரதீப்குமார் பேசியதாவது:பிளஸ் 2 கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெரும்பாலானோர், இன்ஜி., முதலாம் ஆண்டில், அதிகளவு தோல்வி அடைகின்றனர்.
கணித பயன்பாடு குறித்த புரிதல் மாணவர்களுக்கு இல்லை என்பதே காரணம்.கணிதம் கற்பதன் நோக்கம், அதன் பயன்பாடுகளை கற்பிக்கும் போதே ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காகவே இந்த பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவே முதல்முறை. பத்து நாள் பயிலரங்கு முடியும்போதும், ஒவ்வொரு ஆசிரியரும், 100 நிகழ்நேர பயிற்சிகளுக்கு விடைகாண்பர். சிறந்த பங்களிப்புக்கான அறிக்கை தினமும் தயார் செய்வோம்.இதில், திருப்பூர் மாவட்டம், 6வது இடத்தில் இருந்தது.
முதலிடம் ஈரோடு பெற்றது. தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளி ஆசிரியர்களே கணிதத்தில் சிறந்து விளங்கினர்.இவ்வாறு, அவர் பேசினார்.'டிஜிட்டல் டீச்சர்'தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியை கமலா நேரு கூறுகையில், 'பிளஸ்2 படிக்கும் போது, பணித்திறனுக்கான கணித பயன்பாடு குறித்த தெளிவை மாணவர்கள் இதன்மூலம் பெறலாம். 'கிரிப்டோகிராபி, இமேஜ் பிராசசிங், நாசா' என, அனைத்து துறையிலும் உள்ள கணித பயன்பாடுகளை முழுமையாக தெரிந்து கொண்டோம். இதில், பங்கேற்ற ஆசிரியர்கள், திறமையான மாணவர்களை உருவாக்கும் திறன்களை நிச்சயம் பெற்றிருப்பர். இனி டிஜிட்டல் டீச்சர்களாக வலம் வருவோம்,'' என்றார்.

No comments: