Breaking

நவம்பர்:-15. சர்வதேச நன்றி தெரிவிக்கும் தினம்’


இன்று சிறப்பு தினம் நவம்பர்:-15.

சர்வதேச நன்றி தெரிவிக்கும் தினம்’ 

கடைசியா யாருக்கு எப்போ நன்றி சொன்னீங்க? 

கடைசியா யாருக்கு எப்போ நன்றி சொன்னீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அன்றாட வாழ்வில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலருடைய உதவியும், வழிநடத்தலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அதை நாம் கவனித்து அவர்களுக்கு நன்றி சொல்லி விடுகிறோம். ஆனால், பிறந்ததில் இருந்து கடைசி வரை, நம்முடன் வரும் உறவுகளுக்கு நன்றி சொல்லியிருப்போமா என்று கேட்டால், அதற்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இதுவரை சொல்லாமல் இருந்தாலும் இன்று ஒரு நிமிடம் மன நிறைவோடு உங்கள் நன்றியை தெரிவியுங்கள். இன்னைக்கு மட்டும் ஏன் நன்றி சொல்லணும்னு கேட்கிறீங்களா? ஏன்னா இன்னைக்கு ‘சர்வதேச நன்றி தெரிவிக்கும் தினம்’.  

நம்மளோட வெற்றிக்கு முதல்ல சந்தோஷப்படுறவங்க நம்மள பெத்தவங்களாதான் இருக்க முடியும். நம்மளோட கோபம், பாசம், வெறுப்புனு எல்லாத்தையும் அவங்ககிட்ட காட்டுவோம். ஆனா, அவங்க நமக்காக பல விஷயங்களை செய்யுறாங்கனு தெரிஞ்சும் அதை பெரிசா பொருட்படுத்த மாட்டோம். நன்றியை எதிர்ப்பார்த்து அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும், ஒருமுறை பாசத்தோடு அவர்களை கட்டியணைத்து நன்றி கூறிப் பாருங்கள், அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன் !

அப்பா, அம்மாகிட்ட சொல்ல முடியாத ரகசியங்களைக் கூட, நண்பர்கள் கிட்ட தைரியமா சொல்ல முடியும். யாரிடமாவது பல்ப் வாங்கினதாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பாராட்டு பெற்றதாக இருந்தாலும் சரி, அவங்ககிட்ட சொல்லாம இருக்கவே முடியாது. நம்ம போடுற மொக்கை எல்லாத்தையும் தாங்கிகிட்டு, நம்மளோடவே இருக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நம்முடைய நண்பர்கள் மட்டும்தான். அந்த நண்பர்கள், ஒரே பாலினமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைநாம செய்யுற தப்புகளுக்கு நம்ம நண்பர்களைத் தான் முதலில் திட்டுவார்கள் நம்மளப் பெத்தவங்க. அந்த திட்டுகள எல்லாம் வாங்கிக் கொண்டும், நம்ம கூடவே இருக்குற நண்பர்களுக்கு என்னைக்காவது நன்றி சொல்லி இருப்போமா? அந்த நன்றி ஃபார்மலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலையில தட்டியோ, கன்னத்தில் அறைந்தோ, உங்களுடைய பாசத்தையும், அன்பையும் எப்படி வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ அப்படி தெரிவித்தாலே அவர்கள் காலம் முழுக்க உங்களோட இம்சைகளைத் தாங்கும் வலிமையைப் பெற்று விடுவார்கள்.

இந்த சமூகத்தில் நம்மைச் சுற்றி உள்ள மக்களுக்குக்கு நாம எதுவும் செய்யாவிட்டாலும், இந்த சமூகம் நமக்காக பல விஷயங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. இருசக்கர வண்டியில் 'சைடு ஸ்டாண்ட்' எடுக்காமல் போகும்போது, அதை நமக்கு தெரியப்படுத்தும் நபருக்கு நாம் எந்த விதத்திலும் சொந்தமில்லை. ராணுவத்தில் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட குடும்பத்துக்காக போராடி உயிரை இழக்கவில்லை.
நமக்கும் அவர்களுக்கு உறவு எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நமக்காகவும், நம்முடைய சொந்தங்களுக்காவும்தான் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்தவிதக் கவலையும் இன்றி பாட்டு கேட்டுக் கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ வருகிறோம், ஆனால் நம்மைப் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுகிறார்கள் பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும். முக்கியமான ஒரு இடத்துக்கு சீக்கிரமே போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது நாம அதிகம் தேர்ந்தெடுக்கும் வாகனம் ஆட்டோதான். ஏறின அடுத்த நிமிடம் நினைத்த இடத்துக்கு போயாக வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நாம் கொடுக்கும் அவஸ்தைக்கு ஆயிரம் முறைகூட நன்றி சொல்லலாம். 

மிக முக்கியமாக தலைவலி இருக்கோ இல்லையோ, வேலை பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் தவறாமல் வேலைக்குச் செல்லும் அனைவரும் விரும்பிச் செல்லும் இடம், அலுவலகத்தில் அல்லது பக்கத்தில் இருக்கும் டீ கடைதான். டீயா, காப்பியா என கண்டுபிடிக்கக் கடினமாக இருந்தாலும், அங்கு சென்றால் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது போல உணர்கிறோம். இவர்களுக்கு எல்லாம் எப்போதாவது நாம் நன்றி சொல்லியிருப்போமா? இதுவரை சொல்லாவிட்டாலும் இன்று நன்றி சொல்லுங்கள்! 

வாழ்க்கை என்பது நாம் எதிர்ப்பார்த்தபடி எல்லா நேரங்களிலும் அமையாது, அப்படி அமையும்போது, கட்டாயமாக நம்மையும் தாண்டி, வேறு சிலருடைய உழைப்பும், அவர்களின் அர்ப்பணிப்பும் கட்டாயம் இருக்கும். முடிந்தவரை நம்முடைய 'ஈகோ-வை' விட்டுவிட்டு, அந்தந்த நேரத்தில் நம்முடன் இருப்பவர்களுடன் அன்பு பாராட்டி, வாழ்க்கையை அழகானதாக மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள்! கிடைத்த வாழ்க்கையை வரமாக்குவதும், சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. இதனைப் படித்ததற்கு மிகவும் நன்றி!!

No comments:

Powered by Blogger.