ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்".. உலகையே உலுக்கிய சிறுவனின் கண்ணீர் வீடியோ !! யாரையும் கிண்டல் செய்யாதே...
ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்".. உலகையே உலுக்கிய சிறுவனின் கண்ணீர் வீடியோ!!
நான் செத்து போறேன்.. தற்கொலை பண்ணிக்கிறேன்... ஒரு கயிறோ, கத்தியோ இருந்தா என்கிட்ட குடுங்கம்மா... செத்துடறேன்.. என்னை யாராவது கொன்னுடுங்களேன்.. என் நெஞ்சியிலேயே குத்திட்டு செத்து போறேன்" என்று வெடித்து கதறி அழும் சிறுவனின் வீடியோ ஒன்று உலக மக்களை உலுக்கி வருகிறது!
ஒருத்தரை கிண்டலும் கேலியும் செய்தால், அது அவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.. அதுவும் குழந்தைகளின் மென்மையான மனதை கடுமையாகவே இது பாதித்து விடுகிறது.. இதைதான் இந்த சிறுவன் தன் கண்ணீரில் நிரூபித்து விட்டான்!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன்.. பெயர் குவாடன்..
குயின்ஸ்லேண்டில் ஒரு ஸ்கூலில் படித்து வருகிறார்.. வளர்ச்சி குறைந்த குழந்தை.. உயரம் குறைவாகவே இருப்பார்.. உயர வளர்ச்சி குறைபாடு உள்ளது.. இதற்கு Achondroplasisa என்று சொல்வார்கள்.. இந்த 9 வயது வரை பலரது கிண்டலுக்கு உள்ளாகி உள்ளார் போலும்.
மழலையிலை தெரியாத விஷயம், குழந்தை வளர வளர தெரிந்துவிட்டது.. மற்றவர்கள் தம் உயரத்தை குறைபாட்டி குறி வைத்து கிண்டல் கேலி செய்வதை நினைத்து கலங்கி உள்ளார்.. சம்பவத்தன்று இவரது தலையில் தட்டி ஒரு மாணவர் கிண்டலடித்துள்ளார்.. அதற்கு மேல் அவமானம் தாங்கமுடியாமல் சிறுவன் அழுதுகொண்டே தாயிடம் ஓடிவருகிறார்.
"நான் செத்து போறேன்.. தற்கொலை பண்ணிக்கிறேன்... ஒரு கயிறோ, கத்தியோ இருந்தா என்கிட்ட குடுங்கம்மா... செத்துடறேன்.. என்னை யாராவது கொன்னுடுங்களேன்.. என் நெஞ்சியிலேயே குத்திட்டு செத்து போறேன்" என்று வெடித்து கதறி அழுகிறார்..
இதுகுறித்த வீடியோவை குவாடனின் தாய் வெளியிட்டுள்ளார். மகன் இப்படி பேசும்போது பெற்ற தாய் பரிதவித்துவிட்டார்.. நிலைகுலைந்து போய் மகனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. இதையடுத்து அந்த குழந்தையின் அம்மா சொல்கிறார், "உங்கள் கேலியும் கிண்டலும் இதைத்தான் செய்கிறது.. நல்லா பார்த்துக்குங்க... தற்கொலை எண்ணத்தில் ஒரு குழந்தையை வைத்துகொண்டு ஒவ்வொரு நொடியும் நான் பயந்து பயது இருக்கேன்.. ஸ்கூலில், பொது இடங்களில் தினமும் நடக்கும் இந்த கொடுமையால் நாங்க ரொம்ப நொந்து போய் இருக்கோம்" என்று வருத்தத்துடன் சொல்கிறார்.
இந்த வீடியோ பார்ப்போரை நிலைகுலைய வைத்து வருகிறது.. ஏராளமானோர் இந்த வீடியோவை ஷேர் செய்தும், கமெண்ட்களை பதிவிட்டும் வருகிறார்கள்..
"உன்னை கிண்டல் செய்பவர்களை விட நீதான் மிகச்சிறந்தவன்.. உனக்கு நாங்க இருக்கோம்" என்று சிறுவனின் கண்ணீரை துடைக்க பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. இந்த பதிவுகளை கேட்டு அந்த தாய் ரொம்பவும் நெகிழ்ந்துவிட்டார்.. "உங்க எல்லாருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்... எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நாம், மாற்றுத்திறனாளிகள் குறித்து எவ்வளவுதான் விழிப்புணர்வுவுகளை ஏற்படுத்தி வந்தாலும், குறுகிய மனம் படைத்தவர்களும், குரூர எண்ணம் படைத்தவர்களும் இன்னமும் அவர்களை கிண்டல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
ஆனால், இதையெல்லாம் மீறி அந்த மாற்று திறனாளிகளும் சாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இதுதான் அவர்களை கிண்டலடிப்பவர்களுக்கு தரும் ஒரே நெத்தியடி & சம்மட்டி பதில்!


No comments: